கடன் செயலியில் கடன் பெற்ற இளைஞரின் புகைப்படத்தை மார்பிங் செய்து ரூ. 63 ஆயிரம் மோசடி..
புதுச்சேரி, பாகூர் சேலியமேடு பகுதியை சேர்ந்தவர் இளையரசன், 30; இவர் பேஸ்புக்கில் வந்த கடன் செயலி குறித்த விளம்பரத்தை பார்த்துள்ளார். பின்னர், அந்த செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்தபோது, அதில் கேட்கப்பட்ட அனைத்துக்கும் அனுமதி அளித்துள்ளார். தொடர்ந்து, அந்த செயலி மூலம் இளையரசன் 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
சில நாட்களில் இளையரசன் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்திய நிலையில், வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், கடனை திரும்ப செலுத்துமாறு மிரட்டியுள்ளனர்.
மேலும், இளையரசனின் புகைப்படத்தை மார்பிங் செய்து, அவரது நண்பர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த இளையரசன் மர்மநபருக்கு 63 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். தொடர்ந்து, மர்மநபர் கூடுதல் பணம் கேட்டு மிரட்டியதால், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
No comments