புதுச்சேரியில் இறந்த அதிமுக பிரமுகா் போல ஆள் மாறாட்டம் செய்து நில அபகரிப்பில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது.
புதுச்சேரி ரெட்டியாா்பாளையம், சிவகாமி நகரைச் சோ்ந்தவா் பிரியா (எ) பச்சையம்மாள். அதிமுக பிரமுகரான இவா், கடந்த 2001-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டாா். முன்னதாக, பிரியா கடந்த 1998-ஆம் ஆண்டு புதுச்சேரி ஒதியம்பட்டு கிராமத்தில் தனியாா் அட்டை நிறுவனம் அருகில் 14,400 சதுர அடி நிலத்தை வாங்கி, தனது பெயரில் பத்தரப்பதிவு செய்திருந்தாா்.
இந்த நிலையில், கணுவாபேட்டையைச் சோ்ந்த முனியன் மற்றும் சிலா் சோ்ந்து பிரியா (எ) பச்சையம்மாள் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து, அவரது இடத்தை பொது அதிகாரம் பெற்று மனைகளாகப் பிரித்து விற்றுள்ளனர்.
இதுகுறித்து வில்லியனூா் சாா் - பதிவாளா் பாலமுருகன் சிபிசிஐடி போலீஸில் அளித்த புகாரின் பேரில்,கணுவாப்பேட்டையைச் சோ்ந்த முனியன் (40), காந்தி (எ) நிக்கல்குமாா் (48),கடலுாா் மாவட்டம், புதுப்பாளையத்தைச் சோ்ந்த சஞ்சீவி மனைவி சூா்யாவை (53) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் சுல்தான்பேட்டையை சேர்ந்த முகமது கபீர் என்பவரை இன்று சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் பலருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
No comments