Breaking News

உயிரோடு இருக்கும் மூதாட்டியின் ரேசன் அட்டையை ரத்து செய்த அதிகாரிகள். பொருட்கள் வாங்க முடியாமல் தவிப்பு.


உயிரோடு இருக்கும் மூதாட்டியின் ரேசன் அட்டையை ரத்து செய்த அதிகாரிகள். பொருட்கள் வாங்க முடியாமல் தவிப்பு. இறந்ததாக கருதி ரத்து செய்ததாக தகவல். உறவினர்கள் துணையுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த மூதாட்டி. 

திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூர் அருகே உள்ள சத்திரம் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி சுப்பம்மாள் (80). இவர் உறவினர்கள் துணையுடன் நெல்லை  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த   மனுவில் கூறியிருப்பதாவது: வயது முதிர்வு காரணமாக எனது மகன் மூலம் ரேஷன் பொருள்களை வாங்கி வருகிறேன். இந்த நிலையில் எனது குடும்ப அட்டையை ரத்து செய்ததால் அதை புதுப்பிப்பதற்காக கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி மனு அளித்திருந்தேன். ஆனால் கடந்த 13ஆம் தேதி எனக்கு ரேஷன் அட்டை வழங்காமல் மனு நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. 

நான் உயிரோடு தான் இருக்கிறேன். ரேஷன் மூலம் கிடைக்கும் பொருள்களை வைத்து தான் எனது வாழ்க்கையை நடத்தி வருகிறேன். எனவே தயவு செய்து குடும்ப அட்டை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார், மூதாட்டி உயிரோடு இருக்கும் போது அவரை  இறந்ததாக கருதி ரேசன் அட்டையை தகுதி செய்தது எவ்வாறு? இறப்பு சான்றிதழ் தேவை இல்லையா? மீண்டும் அவர் அட்டை கேட்டு விண்ணப்பித்த போதும் களத்தில் சென்று விசாரிக்காமல் நிராகரித்தது சரியா? என்ற பல்வேறு கேள்விகள் எழுகிறது.

இதனிடையே கடந்த காலங்களில் ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வரும் முதியவர்களை சுமார் 1 கிமீ தூரமுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து  அழைத்து வருவதற்கும், கொண்டு விடுவதற்கும்  மாவட்ட நிர்வாகம் சார்பில் கொக்கிரகுளம் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டு பெய்த மழையில் வாகனம் பழுதானது. 

தற்போது வரை அது சரி செய்யப்பட வில்லை.  இதனால் பேட்டரி வாகனம் இயக்கப்படவில்லை.  இதன் காரணமாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த நிலையில் இன்று  மனு அளிக்க வந்த மூதாட்டி சுப்பம்மாள் நடக்க முடியாமல் உறவினர்கள் கை தாங்கலாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாவட்ட வழங்கல்  அலுவலர்  அலுவலகத்தில் விசாரித்த போது இ சேவை மையம் மூலமாக மனு அளிக்கப்பட்டு பாட்டியின்  ரேஷன் அட்டை நீக்கப்பட்டுள்ளது இதுகுறித்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்தனர்.

No comments

Copying is disabled on this page!