Breaking News

தூத்துக்குடி மாவட்டத்தில் 14,65,127 வாக்காளர்கள்: கலெக்டர் இளம்பகவத் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.


தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான இளம்பகவத்  வெளியிட்டார். அதன்படி, விளாத்திகுளம் தொகுதியில் 2,11,859, தூத்துக்குடி தொகுதியில் 2,82,202, திருச்செந்தூர் தொகுதியில் 2,42,272, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2,24,450, ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் 2,47,653, கோவில்பட்டி தொகுதியில் 2,56,691 என மொத்தம் 14,65,127 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், பணித் தொகுதி வாக்காளர்கள் 2,706 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 29.10.2024 முதல் 28.11.2024 வரை நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கு விண்ணப்ப படிவங்களை வாக்காளர்கள் அவர்களுக்குரிய வாக்குச்சாவடிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் அளிக்கலாம். மாவட்டத்தில் 1,627 வாக்கு சாவடிகள் அமைந்துள்ள 905 பள்ளி, கல்லூரிகளிகளிலும் வாக்காளர்களிடமிருந்து மனுக்கள் பெற்றிட நியமன அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

நியமன அலுவலர்களிடம் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் நேரில் அளித்திடலாம். மேலும், வாக்காளர்களின் நலன் கருதி வரும் நவ.16, 17, 23,24 ஆகிய 4 விடுமுறை நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

17 வயது முடிவடைந்தவர்கள் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முன்னதாகவே விண்ணப்பிக்கலாம். எனினும் 2025 ஜனவரி 1ம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைந்த நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இந்த சிறப்பு சுருக்கத் திருத்தக் காலத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 18 வயது பூர்த்தியடைந்து தகுதியடையும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் அந்தந்தக் காலாண்டின் முதல் மாதத்தில் பரிசீலிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும். 

வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று மனு அளிக்க இயலாதவர்கள் www.voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், வேட்டார் ஹெல்ப்லைன் என்கிற மெபைல் செயலி மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்திட விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

மேலும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிறப்பு முகாம் நாட்களில் அனைத்து வாக்காளர்களும் தங்களது ஆதார் எண்ணை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அளித்து வாக்காளர் பட்டியலுடன் இணைத்திடுமாறு கேட்டுக்கொள்றோம். வாக்காளர்கள் தங்கள் சந்தேகங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குசாவடி மறுவரையறைக்கு பின்னர் 1627 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குச்சாவடிகள் மாற்றத்திற்குப் பின்னர் இடமாற்றம், கட்டட மாற்றம் என 55, பெயர் மாற்றம் 4, ஒரு பகுதியிலிருந்து வாக்காளர்களை மற்ற பகுதிக்கு மாற்றம் 8, பிழை திருத்தம் 18, பிரிவு மாற்றம் 4, வாக்குச்சாவடி எண்களை மாற்றுதல் 25 ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியர் பிரபு, துணை கலெக்டர் (பயிற்சி) சத்யா, தேர்தல் தாசில்தார் தில்லைபாண்டியன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளான தி.மு.க. சார்பில் ஆனந்தசேகரன், ரவி, ஜெயக்கொடி, அக்னல், பழனி, பாஸ்கர், அதிமுக சார்பில் சந்தானம், ராஜேந்திரன், சரவணபெருமாள், சிபிஐ சார்பில் கரும்பன், ஞானசேகர், சிபிஎம் சார்பில் ராஜா, பாஜக சார்பில் கிஷோர்குமார், சிவக்குமார், ஆம்ஆத்மி சார்பில் குணசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட நிருபர் 

No comments

Copying is disabled on this page!