எதிர்வரும் பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
தலைமை செயலர் ஷரத் சவுகான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உள்ளாட்சி துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய தலைமை செயலர்,
வடகிழக்கு பருவமழை இம்மாதம் இறுதியில் துவங்க உள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக மழைப் பொழிவு அதிகரிக்கக்கூடும். அதனால், மழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.அனைத்து நீர்நிலைகள், வாய்க்கால்கள் மற்றும் நீர் வழிப்பாதைகள் துரிதமாக துார்வாரப்பட வேண்டும். பேரிடர் காலத்தில் பொதுமக்களை தங்க வைக்க பள்ளி கட்டடங்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அங்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அனைத்து துறைகளின் கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். மழைநீர் தேங்கி உள்ள இடங்களில் உடனுக்குடன் நீரை அப்புறப்படுத்த தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.
No comments